Friday, October 1, 2010

அயோத்தி நிலம் 3 தரப்பினருக்கு சொந்தம்: அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு



டெல்லியிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி நகர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய சுமார் இரண்டரை ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே சிக்கல் நீடித்து வருகிறது. அயோத்தி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளும் இணைக்கப்பட்டு அவற்றை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டது.

60 ஆண்டுகளாக நீடித்து வரும் வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் தனது விசாரணையை நிறைவு செய்து 24.09.2010 அன்று தீர்ப்பு என்று அறிவித்தது.அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைக்க வேண்டும் என்றும், கோர்ட்டுக்கு வெளியே சமாதானமாக செல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் திரிபாதி என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வழக்கு தொடர்ந்தார். திரிபாதியின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய மனுவை விசாரிப்பதற்காக தீர்ப்பு வெளியிட ஒரு வாரம் தடை விதித்தது.

இந்தத் தடை உத்தரவை 28.09.2010 அன்று விலக்கிக் கொண்டதோடு ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து அயோத்தி வழக்கில் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படும் என, அலகாபாத் ஐகோர்ட்டின் சிறப்பு அதிகாரி ஹரிசங்கர் துபே கூறினார்.

அதன்படி இன்று பிற்பகல் 3.30 மணி அளவில், நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் தீர்ப்பை அறிவித்தது. அதன்படி இன்று 4 மணி அளவில் நீதிகள் தீர்ப்பை வாசித்தனர்.

அதன்படி இன்று 4 மணி அளவில் நீதிகள் தீர்ப்பை வாசித்தனர். தீர்ப்பில் அயோத்தி நிலம் மூன்று தரப்பினருக்கு சொந்தம் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 3 மாதகால அவகாசம் உள்ளது என்றும் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய நிலம் 2.5 ஏக்கரை மூன்றாக பிரிக்கப்படும் வரை தற்போதைய நிலை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment