Monday, November 8, 2010

ஹர்பஜன் சிங் அதிரடி சதம் . நாங்கள் நம்பர் ஒன் அணிதான் என்று நிறுபித்தது இந்தியா

அகமதாபாத் 08/11/2010

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் தலை நகர் அகமதாபாத்தில் கடந்த நான்கு நாட்களாக நடை பெற்று வந்தது. இதில் முதலில் பேட் செய்த
இந்திய அணி 487 ரன்கள் எடுத்தது சேவாக் மற்றும் டிராவிட் சதம் விளாசினர்.



இதனை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்க்சில் 459 ரன்கள் எடுத்தது இதில் ரய்டர் சதம் அடித்தார் மற்றும் தான் விளையாடிய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார் கண் வில்லியம்சன் இவர் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த எட்டாவது வீரர் ஆவார் . தொடர்ந்து தனது இரண்டாவது இந்நிக்சை தொடங்கிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர இறுதியில் 15 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் தோனியும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்.ஐந்தாம் நாளான இன்று நிதானமாக ஆடிய லக்ஸ்மன் 91 ரன்கள் குவித்தார் அதிரடியாகவும் நிதானத்துடனும் ஆடிய ஹர்பஜன் சிங் தனது முதல் சத்தத்தை விளாசினார்.இவர் 115 ரன்கள் 193 பந்துகளில் விளாசினார். ஹர்பஜன் சிங் மற்றும் லக்ஸ்மன் ஜோடி இந்திய அணியை வலுவான நிலைல்கு கொண்டு சென்றது. இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்சில் 266 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணியை விட 292 ரன்கள் முன்னிலை பெற்றது. இதை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 22-1 எடுத்திருந்த நிலையில் ஆட நேரம் முடிவடைந்தது. இதனால் வெற்றி தோல்வி இன்றி டிரா வில் முடிவடைந்தது.

இந்திய அணிக்கும் ஹர்பஜன் சிங்கிற்கும் வாழ்த்துக்கள்

Sunday, November 7, 2010

இவர்கள் சின்னஞ் சிறிய வேலைக்காரர்கள்...

இப் படங்களைப் பார்க்கும் முன்பு நீங்களும், உங்கள் குழந்தைகளும் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகளென எண்ணிக் கொள்ளுங்கள்.

உலகில் சிறுவர் தினத்தன்று மட்டும்தான் சிறுவர்களையும், குழந்தைகளையும் கூர்ந்து கவனிப்பவர்களாக நாங்கள் இருக்கிறோம். அவர்கள் சின்னஞ் சிறிய மனிதர்கள். வளர்ந்தவர்களாகிய எம்மைப் பார்த்துத்தான் தங்கள் எதிர்கால அசைவுகளை வளர்த்துக் கொள்பவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். உலகை நல்லதாகவோ, தீயதாகவோ பார்க்கும் பார்வைகளை, சிறுவர்கள் பெரியவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? நமது குழந்தைகளின் தேவைகளுக்குக் கூட செவி மடுக்கவியலாதவர்களாக, நமது குழந்தைகளின் கேள்விகளுக்குக் கூட பதிலளிக்கவியலாதவர்களாக மிகுந்த வேலைப்பளுவுள்ளவர்களாக இருக்கிறோம். குழந்தைகளையும் கவனிக்கவியலாமல், தன்னையும் ஒழுங்காகக் கவனிக்கவியலாமல் ஓடியோடி உழைப்பதெல்லாம் யாருக்காக?

எங்களைச் சூழவுள்ள அழகான ஆடைகள், தீப்பெட்டிகள், சப்பாத்துக்கள், இரும்புச் சாமான்கள், உணவுப் பாத்திரங்கள் இப்படி எல்லாப் பொருட்களிலும் அப் பிஞ்சு விரல்களின் மெல்லிய ரேகைகள் படிந்தேயிருக்கின்றன. நாம் தான் அவற்றைக் கண்டு கொள்வதேயில்லை.

கீழேயுள்ள படங்களைப் பாருங்கள். தனது அடுத்த வேளை உணவுக்குக் கூட தானுழைத்துச் சம்பாதிக்க வேண்டிய நிலையிலுள்ள சிறுவர்கள் இவர்கள். சமூகத்தால் மீட்கப்பட வேண்டியவர்கள்.

# 11 வயதான ஜெய்னல் கடந்த மூன்று வருடங்களாக, இந்த வெள்ளி உணவுப் பாத்திரத் தொழிற்சாலையில் வேலை செய்கிறான். காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை செய்யும் வேலைக்கு மாதாந்தம் கிட்டத்தட்ட 10 US$ அளவு பணம் கிடைக்கிறது. இவனது பெற்றோர்கள் மிகவும் வறியவர்களாக இருப்பதனால் இவனைக் கல்வி கற்க அனுப்ப வழியில்லை. இவ் வேலைக்காக பெற்றோரே இவனைச் சேர்த்து விட்டதாகவும் மாதாந்தம் பணத்தை மட்டும் அவர்கள் பெற்றுக் கொள்வதாகவும் இந்தத் தொழிற்சாலை உரிமையாளர் கூறுகிறார்.



இரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்யுமொரு சிறுவன்

எரிக்கப்பட்டு புகையெழும்பும் பாரிய குப்பைக் குவியலை, ஏழே வயதான ஜெஸ்மின், பனிக்கால குளிர் காலையொன்றில் கிளறுகிறாள். இக் குப்பைக்குள்ளிருந்து கிடைக்கும் பேப்பர், இரும்பு போன்ற பொருட்களை சேகரித்து விற்றுக் கிடைக்கும் பணத்தின் மூலம் தனது குடும்பத்துக்கு உதவுவதாகக் கூறுகிறாள்.

கல்லுடைக்கும் தொழிற்சாலையொன்றில் வேலை செய்யும் சிறுவர்கள்

செங்கல் தொழிற்சாலையொன்றில் வேலை செய்யும் சிறுவர்கள். ஒருவர் சுமக்கும் ஒவ்வொரு ஆயிரம் செங்கல்களுக்கும் 0.9 US$ கூலியாக் கொடுக்கப்படுகிறது.

ரிக்ஷா உதிரிப் பாகங்கள் செய்யும் தொழிற்சாலையொன்றில் வேலை பார்க்கும் எட்டே வயதான முன்னாவின் கரங்கள் இவை. ஒரு நாளைக்கு பத்து மணித்தியாலங்கள் வேலை செய்தால், மாதமொன்றுக்கு 8 US$ சம்பளமாக இவனுக்குக் கொடுக்கப்படுகிறது. எப்பொழுதாவது மின்சாரம் தடைப்படும் நாட்களில் தனக்கு விளையாடவும் நேரம் கிடைப்பதாகக் கூறுகிறான்.

கதவுகளின் இரும்புப் பாகங்களைச் செய்யும் தொழிற்சாலையொன்றில் வேலை செய்கிறான் பத்து வயதான ஸைஃபுர். தனது சக தொழிலாளியைப் போல அல்லாது தன்னால் முகத்தை மறைக்காது வேலை செய்ய முடியுமெனக் கூறுகிறான்.

13 வயதான சிறுவன் இஸ்லாம் வேலை செய்வது ஒரு வெள்ளி உணவுப் பாத்திரக் கடையில். கடந்த இரண்டு வருடங்களாக வேலை செய்துவரும் அவனுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் இரண்டு வேளை உணவைத் தவிர பணமாக ஏதும் வழங்கப்படுவதில்லை.

ரஸுவுக்கு எட்டு வயது. ரிக்ஷா தொழிற்சாலையில் வேலை செய்யும் இவனுக்கு ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களென ஒரு மாதம் தொடர்ந்து வேலை செய்தால் 7 US$ சம்பளமாக வழங்கப்படுகிறது.


விளையாட்டுக்களின் மூலமும், சமூகத்தைக் கூர்ந்து கவனித்தும் தங்கள் உள விருத்திக்களை அதிகரித்துக் கொள்ள வேண்டிய பருவத்திலுள்ள இவர்களைப் போன்ற பல இலட்சக்கணக்கான சிறுவர்கள் பலர் இன்று பல்வேறு வற்புருத்தல்களின் கீழ் இவ்வாறாகத் தொழில்புரிய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு சம்பளமோ, போதியளவு பாதுகாப்போ இல்லை.

உலகில் அனேகமான பெரிய மனிதர்கள் மனசாட்சி சிறிதேனுமின்றி அதிக இலாபத்துக்காகவும், இலவச உழைப்புக்காகவும் சிறுவர்களைப் பயன்படுத்தி தங்களை வளர்த்துக் கொள்கின்றனர்.

உலகில் பல்வேறுபட்ட தொழில்களிலும் பல சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உங்களுக்காகவே உழைக்கும் இவர்கள் சின்னஞ்சிறிய வேலைக்காரர்கள்.


உள்ளுக்குள் எந்த உறுத்தலுமின்றி இந்தக் கண்களை நேராகப் பார்க்க உங்களால் முடிகிறதா?


எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

Saturday, November 6, 2010

அந்தரத்தில் ஊசலாடும் உயிர்களுக்கு வாழ்த்துக்கள் !



குளிரறைகளில் அமர்ந்துகொண்டு, எந்த வித உடல் களைப்புமின்றி, வேலையின் போது ஏற்படும் சிறு சிறு இடைஞ்சல்களுக்காக பெரிதும் சலித்துக் கொள்ளும் நாம், உழைப்பாளர்களெனும் பட்டியலின் கீழ் நேரடியாக உள்ளடக்கப்படக் கூடிய மனிதர்களைப் பார்த்திருக்கின்றோமா? நான் பார்த்திருக்கிறேன்.

மத்தியகிழக்கு நாடொன்றில் பணிபுரியப் போயிருந்த சமயம், பல மாடிக் கட்டிடம் ஒன்றின் உச்சியில் தொங்கிக் கொண்டு கண்ணாடி துடைக்கையில் தவறிக் கீழே விழுந்து அந்த இடத்திலேயே சிதைந்து இறந்து போன ஒரு நேபாள நாட்டுத் தொழிலாளியைப் பார்த்திருக்கிறேன். அடுத்த நாள் அவரது இடத்தில்இன்னுமொருவர் தொங்கிக் கொண்டிருந்தார்.




தினந்தோறும் காலைவேளைகளில் இது போன்ற கூலி வேலைகளுக்காக பாகிஸ்தானியர், ஆப்கானிஸ்தர்கள், நேபாளிகளெனப் பலரும் பல பிரதான தெருக்களில் கொடிய வெயிலில் வாடியபடி, தம்மை அழைத்துச் செல்பவர்களுக்காகக் காத்திருப்பதைக் காணலாம். வாழ்வதற்காக மனிதனுக்கு பணம் தேவையாக இருக்கிறது. அதனை நேர்மையாக ஈட்டும் இவர்களைப் பாராட்டலாம்.

பெருநகரங்களில் வானைத் தொடுமளவுக்கு எழும்பியிருக்கும் பிரமாண்டமான கட்டடங்களைப் பார்த்து வியந்தபடி கடந்துசெல்கிறோம். அந்த அழகு, அந்த பிரமாண்டம், அந்த நவீனத்துக்காக அந்தக் கட்டிடங்கள் எத்தனை உயிர்களைப் பலிகொண்டிருக்குமென ஒரு கணமேனும் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? அந்தக் கட்டட வடிவத்தை வடிவமைத்ததற்காக, நிர்மாணித்ததற்காக பல நிபுணர்கள் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொள்ளும் சமயத்தில், அவர்களது கனவுகள் சாத்தியப்படுவதற்காக மிக அபாயமான களத்தில் நின்று, மிகச் சிரமத்துக்கு மத்தியில் அவற்றைக் கட்டியெழுப்பியவர்களைப் பற்றி எப்பொழுதேனும் நினைவுகூறப்படுகின்றதா? இன்றைய படங்கள் அவர்களது சிரமங்களைச் சிறிதளவு
தொட்டுக் காட்டுகின்றன. பாருங்கள்.
























பார்க்கும்போதே உடல் சிலிர்க்கிறதல்லவா? தாங்கள் அறிந்திராத பிற நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பப்படும் தமது பிள்ளைகள், சகோதரர்கள், துணைகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து என்ன பாடுபடுகிறார்களென நிறையப் பேர் அறிந்திருப்பதில்லை. இது போன்ற மிகக் கடினமான பணிகளெனத் தெரிந்திருந்தால் அனுப்பியிருக்கவும் மாட்டார்கள் அல்லவா?

சிந்திப்போம். அவர்களை கௌரவிப்போம்.

எனது இந்தப் பதிவை இது போன்ற எல்லா உழைப்பாளர்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன் !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.